எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

மார்வின் வில்லியம்ஸ்கட்டுரைகள்

சிறு துண்டைக் காட்டிலும் அதிகமானது

நாமெல்லாரும் ஒரு புதிய இடத்திற்கு போகும்போது, பழைய இடத்தின் ஞாபகங்களில் நம்மில் ஒரு பகுதியை விட்டுச் செல்வது இயல்பு. ஆனால் அதற்கு நேர்மாறாக, அண்டார்டிகாவில் உள்ள வில்லாஸ் லாஸ் எஸ்ட்ரெல்லாஸ் என்ற குளிர் வெறிச்சோடிய இடத்தில் நீண்டகாலமாக வசிப்பவராக மாற, உங்களிடமிருந்து ஒரு பகுதியை விட்டுச் செல்வது மிகவும் அவசியம். அருகில் உள்ள மருத்துவமனை 625 மைல்கள் தொலைவில் இருப்பதால், ஒரு நபர் தனது அப்பென்டிக்ஸ் குடல் வெடித்தால் அதிகமான பாதிப்பிற்குள்ளாகவேண்டியிருக்கும். எனவே ஒவ்வொரு குடிமகனும் அங்கு செல்வதற்கு முன் முதலில் குடல் அறுவை சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.

ஆச்சரியமாயிருக்கிறதல்லவா? ஆனால் தேவனுடைய இராஜ்யத்தின் குடிமக்களாய் மாறுவதற்கு இது பெரிய ஆச்சரியமல்ல. ஏனென்றால், ஜனங்கள் தங்கள் சொந்த வழியில் தேவனை பின்பற்ற முயற்சிப்பதால் தேவனுடைய சீஷராவது என்றால் என்ன என்பதை இயேசு விவரிக்கிறார் (மத்தேயு 16:25-27). அவர் சொல்லும்போது, “ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்” (வச. 24) என்று சொல்லுகிறார். இது தேவனுடைய இராஜ்யத்திற்கு தடையாயிருக்கும் அனைத்தையும் விட்டுவிடுவதைக் குறிக்கிறது. மேலும் நாம் சிலுவை சுமக்க தயாராகும்போது, சமுதாய மற்றும் அரசியல் பாதிப்புகளை மரணபரியந்தம் சகிப்பதற்கு நாம் ஆயத்தமாயுள்ளோம் என்பதை அறிக்கையிடுகிறோம். விட்டுவிடுவது, மற்றும் எடுத்துச் செல்வதோடு தேவனை பின்பற்றும் விருப்பத்தையும் தேர்ந்தெடுக்கவேண்டும். அவருடைய ஊழியத்தையும் தியாகத்தையும் பிரகடனப்படுத்துவதற்கு இது தேவனுடைய படிப்படியான உருவாக்கும் திட்டமாகும். 

இயேசுவைப் பின்பற்றுவது என்பது நம்முடைய வாழ்க்கையில் ஒரு சிறு பகுதியை விட்டுச் செல்வதைக் காட்டிலும் அதிகமானது. அவரைப் பின்பற்றுவது என்பது, அவருடைய உதவியோடு, அவருக்கு ஒப்புக்கொடுத்து நம்முடைய சரீரத்தையும் அவருக்கும் முற்றிலும் கீழ்ப்படுத்துவதாகும். 

சொல்லும் அறை

ஒற்றுமை மற்றும் நட்பை வெளிப்படுத்தும் ஒரு அற்புதமான வழியை வடக்கு ஸ்பெயின் உருவாக்கியது. கையால் செய்யப்பட்ட குகைகள் நிறைந்த கிராமப்புறங்களில், ஒவ்வொரு அறுவடைக்குப் பிறகும் சில விவசாயிகள் ஒரு குகைக்கு மேலே கட்டப்பட்ட ஒரு அறையில் அமர்ந்து, உணவுகளையும் இருப்பு வைப்பார்கள். காலப்போக்கில், அந்த அறை "சொல்லும் அறை" என்றானது. நண்பர்களும் குடும்பத்தினரும் தங்கள் கதைகள், ரகசியங்கள் மற்றும் கனவுகளைப் பகிர்ந்து கொள்ள ஒன்றுகூடும் இடமானது. நம்பிக்கையான நண்பர்களின் நெருக்கமான உறவாடுதல் உங்களுக்குத் தேவைப்பட்டால், நீங்கள் “சொல்லும் அறை”க்குச் செல்வீர்கள்.

அவர்கள் வடக்கு ஸ்பெயினில் வாழ்ந்திருந்தால், யோனத்தானும் தாவீதும் பகிர்ந்து கொண்ட ஆழமான நட்பு அவர்களை ஒரு சொல்லும் அறையை உருவாக்க வழிவகுத்திருக்கலாம். தாவீதைக் கொல்ல வேண்டும் என்று சவுல் ராஜா மிகவும் பொறாமைப்பட்டபோது, சவுலின் மூத்த மகனான யோனத்தான் அவரைப் பாதுகாத்து நண்பனானார். இருவரின் ஆத்துமாக்களும் "ஒன்றாய் இசைந்திருந்தது" (1 சாமுவேல் 18:1). மேலும் யோனத்தான் "ஆத்துமாவைப் போலச்" சிநேகித்தான் (வவ. 1, 3). மேலும், தானே அரியணைக்கு வாரிசாக இருந்தபோதிலும், ராஜாவாக தாவீதின் தெய்வீகத் தேர்ந்தெடுப்பையும் அங்கீகரித்தார். அவன் தாவீதுக்கு அவனுடைய மேலங்கி, வாள், வில், கச்சை ஆகியவற்றைக் கொடுத்தான் (வச. 4). பின்னர், தாவீது யோனத்தானின் நண்பராக அவர் மீது கொண்டிருந்த ஆழ்ந்த அன்பு ஆச்சரியமாயிருந்தது என்று அறிவித்தார் (2 சாமுவேல் 1:26).

இயேசுவின் விசுவாசிகளாக, கிறிஸ்துவைப் போன்ற அன்பையும் அக்கறையையும் பிரதிபலிக்கும் நட்பைக் கட்டியெழுப்ப அவர் நமக்கு உதவட்டும். நண்பர்களுடன் நேரம் ஒதுக்கவும், நம் இதயங்களைத் திறக்கவும், அவரில் ஒருவருக்கொருவர் உண்மையான ஒற்றுமையுடன் வாழவும் செய்வோமாக..

இயேசுவில் இளைப்பாறுதலை கண்டறிதல்

அமைதியற்ற ஆத்துமாவிற்குத் திருப்தி தருவது செல்வாக்கும் வெற்றியும் அல்ல. இந்த உண்மைக்கு, மரித்துப்போன அந்த புகழ்பெற்ற இசைக் கலைஞர் சாட்சி. அமெரிக்க இசை மற்றும் பொழுதுபோக்கிற்கான பிரபல பத்திரிக்கையின்  தரவரிசையில், இவரது இசை தொகுப்புகள் நாற்பது முறைக்கும் மேல் முதலிடம் பிடித்ததுமில்லாமல், இவரது தனிப் பாடல்கள் பலமுறை முதலிடம் பிடித்தது. ஆனால் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்கள் செய்தும், சிறையிலும் சில நாட்கள் கழித்த இவர் தன் சாதனைகளின் மத்தியிலும் ஒரு நாள் இவ்வாறாக புலம்பினார்: "நான் சாதனை செய்திருந்தாலும், திருமண வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தாலும், என் மனதில் என்னால் மேற்கொள்ள முடியாத ஒரு அமைதியின்மை நிலவுகிறது, நான் மரிக்கும் வரைக்கும் அது தொடரும்" என்றார். துரதிருஷ்டவசமாக இறப்பதற்கு முன் கூட, அந்த அமைதியை அவர் கண்டறியவில்லை.

இந்த இசை கலைஞனைப் போலப் பாவத்தினாலும், அதின் பாதிப்புகளாலும் வருத்தப்பட்டுச் சோர்ந்துபோன அனைவரையும் தன்னிடம் தனிப்பட்ட முறையில் வரும்படி இயேசு அழைக்கிறார். "என்னிடத்தில் வாருங்கள்" என்கிறார். நாம் இயேசுவில் உள்ள மீட்பை பெறுகையில், அவர் நமது பாரங்கள் அனைத்தையும் நீக்கி நமக்கு இளைப்பாறுதல் அளிக்கிறார் (மத்தேயு 11: 28). நாம் செய்ய வேண்டியதெல்லாம் அவரை விசுவாசிப்பதும், அவர் அளிக்கும் பரிபூரண வாழ்வை எவ்வாறு வாழ்வதென்று அவரிடம் கற்றுக்கொள்வதுமே (யோவான் 10:10). இயேசுவின் சீஷத்துவம் எனும் நுகத்தை நாம் ஏற்றுக்கொண்டால் அதின் முடிவு நமது ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் (மத்தேயு 11:29).

நாம் இயேசுவிடம் வருவதென்பது, நம் விருப்பத்தின்படி வாழும் சுதந்திரம் அல்ல. அமைதியற்ற நமது ஆத்துமாக்களுக்குச் சமாதானத்தை அருளி, நம்முடைய பாரங்களைக் குறைத்து, அவரில் வாழும் வழிக்குள்ளாய் நம்மை நடத்துகிறார். அவர் நமக்கு உண்மையான சமாதானத்தை தருகிறார்.     

நமது குருவைப் போல

ஒரு வைரல் வீடியோவில், மூன்று வயது வெள்ளை பட்டை கராத்தே மாணவி தனது பயிற்சியாளரை தத்ரூபமாகப் பிரதிபலித்தாள். ஆர்வத்துடனும் உறுதியுடனும் அந்தச் சிறுமி தன் ஆசானோடு  மாணவர்க்கான உறுதிமொழியைக் கூறினாள். பின்னர், நிதானத்துடனும் கவனத்துடனும், அழகான மற்றும் ஆற்றலின் சிறிய பிம்பமாகிய அவள், தன் ஆசிரியர் சொன்ன மற்றும் செய்த அனைத்தையும் பின்பற்றினாள். அவள் மிக அற்புதமாக அதைச் செய்தாள்!

இயேசு ஒருமுறை கூறினார், "சீஷன் தன் குருவுக்கு மேற்பட்டவனல்ல, தேறினவன் எவனும் தன் குருவைப்போலிருப்பான்." (லூக்கா 6:40). உதாரத்துவம், அன்பு மற்றும் குற்றப்படுத்தாமை போன்றவற்றில் தம்மை பிரதிபலிக்குமாறு தம் சீடர்களுக்கு வலியுறுத்தினார் (வ. 37-38) மற்றும் அவர்கள் யாரைப் பின்பற்றுகிறார்கள் என்பதைப் பகுத்தறிந்துகொள்வது அவசியமென்றும் அவர் தம் சீடர்களிடம் கூறினார்: “ குருடனுக்குக் குருடன் வழிகாட்டக்கூடுமோ? இருவரும் பள்ளத்தில் விழுவார்கள் அல்லவா” (வ. 39). குருட்டு வழிகாட்டிகளாக மக்களைப் பேரழிவிற்கு இட்டுச் செல்லும் பரிசேயர்களை இந்த தரநிலை தகுதியற்றதாக்கியது என்பதை அவருடைய சீடர்கள் பகுத்தறிய வேண்டியிருந்தது (மத்தேயு 15:14). மேலும் அவர்கள் தங்கள் குருவைப் பின்பற்றுவதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். எனவே, கிறிஸ்துவின் சீடர்களின் நோக்கம் இயேசுவைப் போல் ஆக வேண்டும் என்பதுதான். ஆகவே, தாராள மனப்பான்மை மற்றும் அன்பைப் பற்றிய கிறிஸ்துவின் போதனைகளைக் கவனமாகக் கவனித்து, அதைப் பின்பற்றுவது அவர்களுக்கு முக்கியமானதாக இருந்தது.

இன்று இயேசுவைப் பின்பற்ற முயலும் விசுவாசிகளாகிய நாம் அறிவிலும், ஞானத்திலும், நடத்தையிலும் அவரைப் போல் ஆக, நம் வாழ்வை நம் மாபெரும் குருவிடம் ஒப்படைப்போம். உதாரத்துவமான, அன்பான வழிகளைப் பிரதிபலிக்க அவர் மட்டுமே நமக்கு உதவ முடியும்.

நம் அனைத்து காரியங்களிலும்

1954 இல், மார்ட்டின் லூத்தர் "வியாபாரிகளுக்கிடையே பொதுவான ஒரு விதிமுறை உண்டு, 'மற்றவர்களைக் குறித்து எனக்கு எந்த கரிசனையும் கிடையாது. எனது லாபமும் எனது பேராசையும் நிறைவேறினபின்புதான் மற்ற எல்லாமே'. இது அவர்களுடைய பிரதானமான சட்டமாயுள்ளது" என்றார். இதற்கு இருநூறாண்டுகள் கழிந்து, நியூ ஜெர்சி மாகாணத்தின் மவுண்ட் ஹாலி பகுதியைச் சேர்ந்த ஜான் வுல்மேன் என்பவர் இயேசுவின் மீதிருந்த பற்றுதலை தனது தையற்கடை தொழிலில் வெளிக்காட்டினார். அடிமைகளின் விடுதலைக்கு ஆதரவளிக்கும் விதத்தில், கட்டாய வேலைவாங்குதலில் ஈடுபட்ட நிறுவனங்களின் பஞ்சு மற்றும் சாயப் பொருட்களை வாங்க மறுத்துவிட்டார். சுத்த மனசாட்சியோடு அவர் தனக்கடுத்தவரையும் நேசித்து, தனது காரியங்களில் உத்தமத்தையும் உண்மையையும் காத்து வாழ்ந்தார்.

அப்போஸ்தலன் பவுலும், "கபடமில்லாமல் திவ்விய உண்மையோடே" (2 கொரிந்தியர் 1:12) வாழ பிரயாசப்பட்டார். கொரிந்து பட்டணத்தில் ஒருவன், இயேசுவின் அப்போஸ்தலன் என்கிற தன்னுடைய அதிகாரத்தைக் குறைத்து மதிப்பிட்டபோது, அவர்கள் மத்தியில் தான் நடந்துகொண்ட விதத்தைத் தற்காத்தார். தன்னுடைய வார்த்தைகளும் எழுத்துக்களும், நுட்பமான பரிசோதனையைக்கூட எதிர்கொள்ளக்கூடியவை என்றெழுதினார் (வ.13). தன்னையல்ல, தன்னுடைய செயல்திறனுக்குத் தேவனின் கிருபையையும் வல்லமையையும் தான் சார்ந்துகொண்டிருப்பதை வெளிக்காட்டினார் (வ.12). சுருங்கச் சொன்னால், கிறிஸ்துவின் மீதுள்ள விசுவாசமே பவுலின் அனைத்து காரியங்களிலும் பரவியிருந்தது.

கிறிஸ்துவின் தூதுவர்களான நாமும் தொழில், குடும்பம் என்று நமது அனைத்து காரியங்களிலும் நற்செய்தியை ஒலிக்கச்செய்வதில் கவனமாயிருப்போம். தேவனின் கிருபையாலும் வல்லமையாலும் அவருடைய அன்பைப் பிறருக்கு நாம் வெளிக்காட்டுகையில், நாம் தேவனைக் கனப்படுத்துகிறோம்; பிறரையும் நேசிக்கிறோம்.

இது போதும்

ஒரு திரைப்படத்தில், ஏழை விவசாயி ஒருவர் தன்னுடைய மூன்று மகள்களுக்குத் திருமணம் முடிக்கச் சிரமப்படுகிறார். தேவனிடம், தனது பொருளாதாரத்தைக் குறித்து இப்படிச் சொல்கிறார்: "தேவனே நீர் அநேக ஏழைகளைப் படைத்துள்ளீர். ஏழையாய் இருப்பது அவமானமல்ல என்று புரிகிறது, ஆனால் அதில் பெருமையும் இல்லையே. எனவே எனக்குச் சிறிது ஆஸ்தி இருப்பதில் தவறென்ன, நான் ஐசுவரியவானாய் இருந்தால் உமது பிரம்மாண்டமான நித்திய திட்டம் நிறைவேறாதோ?"

ஷோலேம் அலெய்க்கேம் என்ற இத்திரைப்பட வசனகர்த்தா இந்த விவசாயி மூலம் இவ்வார்த்தைகளைப் பேசுவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே, ஆகூர் இதேபோல யதார்த்தமான ,சற்று வித்தியாசமான ஜெபத்தைத் தேவனிடம் ஏறெடுப்பதை நீதிமொழிகள் புஸ்தகத்தில் பார்க்கலாம். ஆகூர் தேவனிடம் தனக்குச் செல்வத்தையும் வறுமையையும் தரவேண்டாமென்றும், மாறாகத் தனது படியை அளந்து போஷிக்குமாறும் கேட்கிறார்  (நீதிமொழிகள் 30:8-9). அதிகமாக இருந்தால் பெருமையடைந்து தேவனை மறுதலிப்பவனாக மாறிவிடக்கூடும், தரித்திரனாக விட்டால் தான் பிறரிடம் திருடி தேவனின் நாமத்திற்கு அவமரியாதை உண்டாக்கக்கூடும் என்றும் அறிந்திருந்தார் (வ.9). தன்னை போஷிப்பவர் தேவனே என்பதை ஆகூர் புரிந்துகொண்டார். எனவே, தனது அனுதின தேவைகளுக்கு "படியை அளந்து" போடுமாறு கேட்கிறார். தேவனைப் பின்தொடர்வதையும், அவரால் மட்டுமே உண்டாகும் நிறைவையும் ஆகூரின் ஜெபம் வெளிக்காட்டுகிறது.

ஆகூரின் இந்த மனநிலை நமக்கும் இருப்பதாக, தேவன் ஒருவரே நம்மை போஷிக்கிறார் என்பதை ஏற்றுக்கொள்வோமாக. அவருடைய நாமம் மகிமைப்படும் விதத்தில் பொருளாதார உயர்வுகளை நாடுகிற நாம், அவருக்குமுன் மனநிறைவோடு வாழவும் பழகலாம். ஏனெனில் அவர் "அளந்து போடுகிறவர்" மட்டுமல்ல, அதற்கும் மேலாகவே அளிப்பவர்.

ஜாக்கிரதையாய் இருங்கள்

ஒருவன் தன் சிநேகிதர்களுடன் பனிச்சரிவு எச்சரிக்கை பலகைகள் பதிக்கப்பட்டிருந்த பனிச்சறுக்கு விடுதியின் வாயில் வழியாகச் சென்று பனிச்சறுக்கு விளையாட்டை ஆரம்பித்தார். கீழிறங்கும் இரண்டாவது பயணத்தில், யாரோ ஒருவர், “பனிச்சரிவு!” என்று சப்தமிட, ஆனால் அந்த மனிதன் தப்பிக்க முடியாமல் பனியில் இறந்து போனான். சிலர் அவரை கத்துக்குட்டி என்று விமர்சித்தனர். ஆனால் அவர் கத்துக்குட்டியில்லை. அவர் ஒரு “சான்றளிக்கப்பட்ட பனிச்சரிவு பயிற்சியாளர்.” “அவர் பாதுகாப்பாய் பயணிக்காததினால் தான் மரித்துவிட்டார்" என்று விபத்தில் மரித்தவர்களைக் குறுpத்து பனிச்சறுக்கு வீரர்களும், பனிச்சரிவு பயிற்சியாளர்களும் தவறான காரணங்களைக் கொடுக்க அதிக வாய்ப்புள்ளது என்று ஒரு ஆராய்ச்சியாளர் கூறுகிறார். 

இஸ்ரவேலர்கள் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குச் செல்லத் தயாரானபோது, தம்முடைய ஜனங்கள் கவனமாகவும் எச்சரிக்கையுடனும் காத்துக்கொள்ள வேண்டும் என்று தேவன் விரும்பினார். எனவே, அவருடைய அனைத்து “கட்டளைகளையும் நியாயங்களையும்” (உபாகமம் 4:1-2) கைக்கொள்ளும்படிக்கும், அதைக் கைக்கொள்ளாதவர்கள் மீது தேவன் அனுமதித்த நியாயத்தீர்ப்பையும் நினைவுகூரும்படிக்கு அவர்களுக்குக் கட்டளையிட்டார். அவர்கள் தங்களைத் தாங்களே பரிசோதிக்கவும், தங்கள் உள்ளான வாழ்க்கையைக் கண்காணிக்கவும் “சாக்கிரதையாய்" இருக்கவேண்டும் (வச. 10). இது வெளியேயிருந்து வரும் ஆவிக்குரிய ஆபத்துகளிலிருந்தும் உள்ளான பொறுப்பற்ற தன்மையிலிருந்தும் அவர்களை காப்பாற்ற அவர்களுக்கு உதவியாயிருக்கும். 

நம்முடைய பாதுகாப்பைத் தகர்த்து, அக்கறையின்மை மற்றும் சுய வஞ்சனைக்கு ஆளாவது இயல்பு. நாம் வாழ்க்கையில் தோற்காமல் இருக்கும்பொருட்டும், அவருடைய கிருபையினிமித்தம் பாவமன்னிப்பையும் நமக்கு அருளுவாராக. அவருடைய ஆலோசனைகளுக்கு செவிகொடுப்பதினிமித்தமும், நம்முடைய பாதுகாப்பைப் பலப்படுத்தி, நல்ல தீர்மானங்களை எடுப்போம்.

தேவன் சொன்னார்

விஞ்ஞானி அலெக்ஸாண்டர் கிரகாம்பெல் 1976ஆம் ஆண்டு தொலைப்பேசியில் முதல் வார்த்தைகளைப் பேசினார். அவர் தன்னுடைய உதவியாளராகிய வாட்சனிடம், “வாட்சன், இங்கே வா. நான் உன்னைப் பார்க்கவேண்டும்” என்று சொன்னார். வார்த்தைகள் உடைந்து கேட்கப்பட்டாலும், கிரகாம்பெல் என்ன சொன்னார் என்பதை வாட்சனால் புரிந்துகொள்ள முடிந்தது. தொலைப்பேசியின் மூலம் தொடர்புகொள்ளப்பட்ட கிரகாம்பெல்லின் முதல் வார்த்தைகள், மனித சரித்திரத்தில் தொடர்புகொள்ளுதலின் ஒரு புதிய சகாப்தத்தின் துவக்கம் எனலாம்.
ஒரு புதிய நாளின் துவக்கத்தில் ஒழுங்கின்மையும் வெறுமையுமாயிருந்த பூமியில் “வெளிச்சம் உண்டாகக்கடவது” (வச.3) என்ற தேவனின் முதல் வார்த்தைகள் ஒளித்தது. இந்த வார்த்தைகள் சிருஷ்டிப்பின் வல்லமைகொண்ட வார்த்தைகள். அவர் சொன்னார்; சொன்னது நிஜமாகவே தோன்றியது (சங்கீதம் 33:6,9). தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார், வெளிச்சம் உண்டாயிற்று. இருளில் மூழ்கியிருந்த உலகம் அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து ஒளிக்கு இடங்கொடுத்தது. ஒளி என்பது, இருளின் ஆதிக்கத்திற்கு தேவன் கொடுத்த பதில். அவர் ஒளியை உண்டாக்கியபோது, “அது நல்லது” என்று கண்டார் (ஆதியாகமம் 1:4).
தேவனுடைய இந்த முதல் வார்த்தைகள் கிறிஸ்தவர்களுடைய வாழ்க்கையில் இன்னும் வல்லமையுள்ளதாய் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் உதயமாகும்போது, அவர் நம்முடைய வாழ்க்கைக்கு அந்த வார்த்தைகளை மீண்டும் மீண்டும் உரைக்கிறார். ஒளி வரும்போது இருள் மறைந்து ஒளிக்கு இடங்கொடுப்பதுபோல, அவர் நம்மை அழைத்து அவரைப் பார்க்கும்படி செய்கிறார் என்பதை உணர்ந்து அவருக்குத் துதிகளை ஏறெடுப்போம்.

மனதிலிருந்து

“செயல்படும் நோவா பேழை” என்ற பெயர் விலங்குப் பிரியர்களுக்கு விளையாட்டாய்த் தோன்றியது. பெரும் சத்தம் மற்றும் துர்நாற்றம் ஒரு அறையிலிருந்து வந்தது என்ற புகாரின் அடிப்படையில், அமெரிக்க விலங்குகள் நலச்சங்கத்தினர் வந்து பார்வையிட்ட போது, அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏனென்றால் “செயல்படும் நோவா பேழை” குழுவினர்  புறக்கணிக்கப்பட்ட விலங்குகளை எல்லாம் ஓரிடத்தில் சேர்த்து வைத்திருந்தனர் (பின்னர் வெளியேற்றப்பட்டது). புறக்கணிக்கப்பட்ட சுமார் நானூறுக்கும் மேற்பட்ட விலங்குகளைக் கண்டு மீட்டனர்.

துர்நாற்றம் வீசும் நூற்றுக்கணக்கான விலங்குகள் நம்மிடம் இல்லாமலிருக்கலாம், ஆனால் நம் மனதில் பாவம் நிறைந்த எண்ணங்களும், செய்கைகளும் பேணி வளர்க்கப் படாமல், அவற்றைக் களைந்தெறிய வேண்டும் என இயேசு கூறினார்.

ஒரு மனிதனைச் சுத்தமுள்ளவனாகவும் தீட்டுள்ளவனாகவும் மாற்றுவதைக் குறித்து இயேசு தம் சீஷர்களிடம் போதிக்கையில், அழுக்கான கரங்களோ அல்லது "வாய்க்குள்ளே போகிறதோ" மனிதனை தீட்டுப்படுத்தாது, மாறாகத் தீய இதயமே அவனைத் தீட்டுப்படுத்தும் (மத்தேயு 15:17–19) என்றார். நமது மனதிலிருந்து வீசும் துர்நாற்றத்திற்குக் காரணம், நமது வாழ்க்கையே. பின்னர் இயேசு, நம் மனதிலிருந்து வெளியேறும் தீய எண்ணங்களுக்கும் செயல்களுக்கும் பல உதாரணங்களைச் சொல்கிறார் (வ.19). வெளிப்பிரகாரமாக நாம் எவ்வளவுதான் சமய சடங்குகளையும், மதம்சார்ந்த செயல்களையும் செய்தாலும் நம் மனதை அவை சுத்தப்படுத்தாது. நம் இதயம் மாற நமக்குத் தேவனே தேவை.

துர்நாற்றம் வீசும் வாழ்வின் அழுக்குகளை அவரே சுத்தம் செய்ய நம்மை அனுமதிப்போம். நம் மனதில் புதைந்துள்ளவற்றைக் கிறிஸ்து வெளிக்கொணர்ந்து, நமது வார்த்தைகளும் செயல்களும் அவரது விருப்பத்தின்படி அவர் மாற்றுகையில், அவரைப் பிரியப்படுத்தும் நறுமணமாக நாமும் மாறுவோம்.